ஆசையே அழிவுக்கு காரணம்

ஆசையே அழிவுக்கு காரணம்“.இதை சொல்லாத ஆத்மஞானிகளே கிடையாது. பகவான் கிருஷ்ணரில் இருந்து, இயேசு, புத்தர், மஹாவீரர் என எல்லா பரமாத்மாக்களும், இந்த கருத்தை வலியுறுத்த தவறவில்லை.

ஆடம்பரமான உடைகள் அணிவதில் இருந்து, ருசியான உணவுகள், சொகுசு கார்கள், நகைகள், பதவி, பணம், பங்களா, அழகான பெண்கள், புகழ், ஏன் நல்ல பெயற்கும் கூட ஆசை படுபவர்களை, நம்மை சுற்றியும் பார்க்க முடிகிறது. எதற்கும் ஆசை படாதவர்கள் யாரேனையும் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட நடை முறையில் சாத்தியபடாத ஒன்று என்றே கூறலாம்.

அப்படிஆசைஇருந்தால் தான் என்ன? ஆசை தானே, மனிதனை ஒரு இலக்கை நோக்கி அடைய செய்யும் கருவி!. ஆம், ஆசை என்பது ஒரு நல்ல கருவி தான், நம் இலக்குகள் சரியாக இருக்கும் போது மட்டும்… “அத்தனைக்கும் ஆசைப்படு” என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறுகிறார். ஆனால் ஆசைகள் பரிசுத்தமாய் இருக்கட்டும் என்றும் ஒரு நிபந்தனை!.

 
பள்ளியில் படிக்கும் மாணவன், தான் படித்து பெரிய டாக்டர் ஆக வேண்டும் என்று எண்ணுகிறான் என கொள்வோம். எதற்கு என்று கேட்டால், பொருளிள்ளதவர்களுக்கு, இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு என்று கூறுகிறான். இந்த உயர்ந்த லட்சியம், அவன் மருத்தவன் ஆன பின்பும் தொடர்ந்தால், அவன் படிக்கும் போது கொண்டஆசை, உண்மையிலேயே உயர்ந்தது எனலாம். ஆனால் எத்தனை ஆசைகள் இப்படி ஆரம்பித்த படியே நீடிக்கின்றன?.

உயர்ந்த ஆசைகள்என்பதை எப்படி வரையறுக்க முடியும்? பகவத் கீதை, புலன் இன்பங்களில், உயர்ந்த யோகி, பற்று (ஆசை) வைக்க மாட்டான் என்று கூறுகிறது. புலன் இன்பங்கள், மனதுடன் தொடர்பு உடையவை.
 
மனதை கட்டுப்படுத்த முடியாதவனே, புலன் இன்பங்களில் ஆசை வைக்கிறான். இந்த ஐம்புலன்களை மகிழ்ச்சி படுத்தும் செயல்கள் ஆகிய பார்த்தல், கேட்டல், ருசித்தல், நுகர்தல் மற்றும் தொடுஇன்பம் ஆகியவைகளை பொறுத்த ஆசை, தாழ்ந்தவைகள் என்று கூறப்படுகிறது. இந்த புலன் இன்ப ஆசைகள், எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என பகவத் கீதை கீழ் படி கூறுகிறது.
“த்யாயதோ விஷயான்பும்ஸ: ஸங்கஸ்தேக்ஷுபஜாயதே
ஸங்காத்ஸஞ்சயாதே காம: காமாத்க்ரோதோபிஜாயதே” (2.62 )
“க்ரோதாத்பவதி ஸம்மோஹா: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:
ஸ்ம்ருதிப்ரம்சாத் புத்திநாசோ புத்திநாசாத்ப்ர்ணச்யதி” (2.63)
சதா உலக விசயங்களை யோசித்து கொண்டு இருக்கும் மனிதனுக்கு அதில் பற்று உண்டாகிறது. பற்றினால் ஆசை (காம:) உண்டாகிறது. ஆசையினால் கோபம் உண்டாகிறது. கோபத்தால் மனக்குழப்பம் ஏற்படுகிறது. மனக்குழப்பத்தால் நாம் பெற்ற “புத்தி” யில் நாசம் உண்டாகிறது. புத்திநாசம் (அறிவு அகன்ற நிலை) ஏற்பட்டவனுக்கு நன்மை எனபது ஏது?

இவ்வாறு, இந்த இரண்டு ஸ்லோகங்கள் பொருள் தருகின்றன. எத்தனை அழகான மற்றும் ஆழமான ஆராய்ச்சி!!!.
அடிப்படையை ஆராய்ந்து அதன் முடிவு வரை விளக்குகிறது, இந்த ஸ்லோகங்கள். அக ஆராய்ச்சியில் நிலை கொண்டவன், உலக விஷயங்களுக்காக பெரிதாக அலட்டி கொள்வதில்லை. மேலும் அவன் தன் ஆத்ம சுகம் ஒன்றையே உயர்வென கருதுகிறான், போன்ற விளக்கங்கள் உண்மையில் உலக பொருட்களுக்கான ஆசைகள் துச்சமானவைகள் தான் என ஆணித்தரமாய் கூறுகிறது.

மேலும் ஆசையின் அடிப்படையான குணங்கள் என்ன என்றும், அது எங்கே குடி கொண்டுள்ளது என்றும் கூட கீதை தெளிவு பட கூறுகிறது.
“ஆவ்ருதம் ஜ்ஞானமேதென ஜ்ஞானினோ நித்யவைரிணா
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணானலேன ச” (3.39) “இந்திரியாணி மனோ புத்தி ரஸ்யாதிஷ்டானமுச்யதே
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞானமவ்ருத்ய தேஹினம்” (3.40)

 

கீதை யை பொறுத்தமட்டில், ஆசை (காமம்) என்பது ஞானிகளின் பரம எதிரி என்று வர்ணிக்க படுகிறது. மேலும் ஆசை (காமம்) பெற்றுள்ள குணங்கள் என மூன்று விஷயங்கள் கூறப்படுகிறது. அவை :நெருப்பிற்கு சமமானது“, “விரும்பிய வடிவை பெற வல்லது மற்றும்ஒருபோதும் அடைவதால் திருப்தியுராதது அதாவது ஒருபோதும் முழுமை அடையாதது“. (3.39)

புலன்கள், மனம், புத்திஇந்த மூன்றும் தான் ஆசையின் இருப்பிடங்கள். மேலும் ஆசையானதுமனம், புத்தி மற்றும் இந்திரியங்கள் (புலன்கள்)ஆகியவற்றை ஆட்கொண்டு, ஞானம் எனும் பரம்பொருளை மறைத்து நிற்கின்றது. (3.40)

இந்த இரண்டு ஸ்லோகங்கள், ஆசையின் குணங்கள் மற்றும் இருப்பிடத்தை நமக்கு விளக்கமாக கூறுகிறது. நமது எதிரியின் குணங்கள் நமக்கு தெரிந்தால், அவனை எப்படி வீழ்த்தலாம் என்பது பற்றி தெளிவான வியூகம் அமைக்க முடியும். அது போல அவன் எங்கே இருக்கிறான் எனவும் தெரிந்து விட்டால், தாக்குவது மிக சுலபமாக கூடும். இந்த இரண்டு ஸ்லோகங்கள் அதற்குத்தான் வழி அமைத்து கொடுக்கிறது. ஞானியின் ஜென்ம விரோதியாகஆசைகூறப்படுகிறது. மேலும் அதன் குணங்கள் தெள்ள தெளிவாக விவரிக்க படுகிறது. முதலில் நெருப்பினை போன்றது என்பதன் மூலம், அது அழிக்கும் தன்மையை பெற்று இருக்கிறது என கூறப்படுகிறது.

 
மேலும் நெருப்பு எரிவதற்கு பொருட்கள் கொடுக்கப்படும் வரையில் அது மேலோங்கி வளர்ந்து கொண்டே தான் இருக்கும். அது போல, ஆசையிடம், அது விரும்பும் பொருளை கொடுத்தாலும், அது இன்னும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். இரண்டாவதாக, ஆசை விரும்பிய வடிவை (காமரூபேண) பெற வல்லது என கூறப்படுகிறது. முதலில்பொருளாசைஎனில், அதை அடக்கி விட்டாலும்,பெண்ணாசை“, “புகழாசை“, என பல புதிய வடிவில் வந்து நம்மை ஆட்கொள்ளும்.
எனவே, ஆசைக்கு விரும்பிய வடிவம் பெரும் குணம் உள்ளது எனப்படுகிறது. மூன்றாவதாக, ஆசை ஒரு போதும் திருப்தி அடையாதது என கூறப்படுகிறது. ஒருவன், சிப்பாயாக இருந்து, தளபதியாக வேண்டும் என்று ஆசை கொண்டால், அவன் தளபதியாக ஆகும் போது, அவன் மன்னனாக வேண்டும் என்று புது ஆசை, அதாவது திருப்தி அடையாமல் அடுத்த நிலை நோக்கிய ஆசை புகுந்து விடுகிறது. இப்படி ஆசையின் குணங்கள் விளக்க படுகிறது.

மேலும் ஆசை, எங்கு குடி கொண்டு இருக்கிறது என்றால், அதுபுலன்கள்“, “மனம்“, “புத்திஎன்ற மூன்றின் மீதும் குடி கொண்டு இருக்கிறது. புலன்கள் என்பது நம் உடலின் அங்கங்கள். மனம் என்பது புலன்களை விட நுண்ணியது ஆனால் அதை விட சக்தி வாய்ந்தது. புத்தி, மனதை விட நுண்ணியது மற்றும் சக்தி வாய்ந்தது. எடுத்த எடுப்பில் சிகரத்தை தொட்டு விடுவதை முயற்சிப்பதை விட, படி படியாக செல்வது சிறந்தது. அது போல, முதலில் புலன்களை அடக்கி அதன் மூலம் மனம், புத்தி என்ற இரண்டையும் அடக்கலாம் என கூறப்படுகிறது. எப்படி, புகை சூழ்ந்து இருக்கும் நெருப்பினை காண முடியாதோ, அது போல, ஆசை சூழ்ந்து இருக்கும் ஞானத்தை காண முடியாது எனவும் கூறப்படுகிறது.

ஆசைகள், உண்மையில் எதிர்பார்ப்புகளை தூண்டி விடுகிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது, கோபம் வருகிறது. பின் அதன் வழியாக அனைத்து கெட்ட எண்ணங்களும், நம் உள் புக ஆரம்பிக்கின்றன. உலகெல்லாம் ஒளி விடும் சூரியனை, கையாலோ, பிற பொருட்களாலோ மறைக்க நினைப்பதை விட, நம் கண்களை மட்டும் மூடி கொள்வது புத்திசாலி தனம் அல்லவா. அது போல, ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி விட துடிப்பதை விட, ஆசைகளையே அடக்குவது தான் மிகவும் சிறந்தது என நினைக்கிறேன்.


தன் வாழ்நாளில் எப்படியாவது ஒரு சைக்கிள் மட்டும் வாங்கி விட்டால் போதும் என்ற ஒருவனது ஆசை, அடுத்து அவன் சைக்கிள் வாங்கிய பின், மோட்டார் சைக்கிள், கார் என அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. உண்மையில் அவனுக்கு மோட்டார் சைக்கிள் அல்லது கார்களுக்கான தேவை இல்லாவிடினும் அவற்றை அடைய நினைக்கும் ஆசையில், அவனே தன்னை துன்பத்தில் ஆட்படுத்தி கொள்ள விழைகிறான். இவ்வாறு தேவைக்கு மேல் உள்ள ஆசைகளின் பிடியில் சிக்காதவர்கள் உண்மையில் எத்தனை பேர்? ஆசைக்கு அளவு தான் ஏது?


வாழ்க்கையில் துன்பம் அற்று வாழ்வதற்கு, புத்தர் நான்கு உண்மை கோட்பாடுகளை குறிப்பிடுகிறார். அவை,
  1. எல்லா உயிர்களும் துன்பத்தை உள்ளடக்கியவை.
  2. எல்லா துன்பங்களும், ஆசைகளில் இருந்து உண்டானவை.
  3. எல்லா துன்பங்களும், ஆசைகளை அகற்றும் போது முடிகின்றன.
  4. அதனால் எல்லா துன்பங்களுக்கும் முடிவு காண வழி (ஆசைகளை அகற்றுதல்) உள்ளது.
எத்தனை சிறந்த கருத்துகள்ஆசையே அழிவுஎன்று பரமாத்மா மகாவீரரும் குறிப்பிடுகிறார்.

அவர் ஒரு நாள், காட்டில் தவம் செய்து கொண்டு இருக்கும் போது, குளிரால் நடுங்கி கொண்டு இருந்த ஒரு ஏழையை பார்த்தார். தான் அணிந்து இருந்த வஸ்திரத்தின் பாதியை கிழித்து கொடுத்து அந்த எளியவனுக்கு உதவி செய்தார்.
 
அந்த ஏழை, மகாவீரர் அளித்த அந்த துணி மிகவும் விலை உயர்ந்தது என தெரிந்த கொண்ட படியால், மீதி பாதியையும் அவரிடம் இருந்து பெற்று விட வேண்டும் என ஆசை கொண்டான். மீதி பாதியை, அவரிடம் கேட்டு பெற்று விடலாம் என, மகாவீரர் இருக்கும் இடத்திற்கு சென்றான். அப்போது அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அதிர்ஷ்ட வசமாக, மீதி பாதி துணியும் கீழே விழுந்து கிடந்தது.
கேட்டு பெற வேண்டும்என்று கிளம்பியவன், ஆசை மிகுதியால், அவருக்கு தெரியாமலேயே அதை அடைந்து விட எண்ணினான். இங்கே,அகங்காரம்“, அல்லதுநற்பெயருக்கான ஆசைபுதிதாக அவனிடம் எட்டி பார்த்து விட்டது.
 
அதாவது,நான் இவரிடம் கேட்டு பெற வேண்டுமா?என்ற அகங்காரமோ, அல்லது,மறுபடியும் இவரிடம், மீதி துணியை கேட்டால், இவர் என்னை தப்பாக நினைக்க கூடும். எனவே தெரியாமல் எடுத்து சென்றால் அவர் என்னை தப்பாக நினைக்க மாட்டார் என்றநற்பெயருக்கானஆசையோ அவனிடத்தில் புதிதாக தோன்றியது. எனவே, திருட துணிந்தான்.
 

திருடிய பின், காலில் முள் குத்தியதால் சத்தம் போட மகாவீரர் விழித்து கொண்டார். இந்நிலையில் சிறிதும் கோப படாத மகாவீரர், “இந்த மீதி பாதி துணியில் நான் கொண்ட ஆசை அல்லவா, இவனை திருடனாக மாற்றியது” என்று நினைத்து வருந்தினாராம். எத்தனை பெரிய ஞான நிலை!!!.

உண்மையில் ஆசைகளை, நாம் நமக்காக மட்டுமே உருவாக்கி கொள்வதில்லை. அவைகள் நம்மில் இருந்து நம் பரம்பரைகள், அல்லது நம்மை சார்ந்தவர்கள் என எல்லோரிடமும் விதைத்து கொண்டும் தான் இருக்கிறோம்.

 
நான் மருத்துவன் ஆக முடியவில்லை என்பவன், தன் மகனை எப்படியும் டாக்டர் ஆக்கி விட வேண்டும் என்ற முனைப்பில், சில தவறேனும் (பணம் கொடுத்து) செய்து தன் மகனை மருத்துவ கல்லூரியில் சேர்த்து விடுகிறான். ஆனால் உண்மையாக அந்த படிப்பை பெற வேண்டிய ஒரு மாணவனது ஆசைகள் அடக்கப்பட்டு, அங்கே அடுத்த ஆசைக்கான விதை விதைக்கப்படுகிறது.
 

அந்த ஆசைகள் நிறைவேறாத மாணவன், அடுத்து தன் வாரிசு மூலம் விட்டதை அடைய நினைக்கிறான். அல்லது தன் நிலைக்கு மாற்றான ஒரு தவறான வழியை கையில் எடுத்து ஆசைகள் அடங்காத கோபத்தை பிறர் இடத்தில் காட்டுகிறான். எனவே ஆசை எந்த வகையிலும் நம்மை மட்டும் பாதிப்பவை அல்ல. அவைகள் பிறரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்க வல்லது.கோபம், வக்கிரம் போன்ற புதல்வர்களை பெற்ற அன்னை – ஆசை என்று ஒரு சொல்லும் உண்டு.

ஆசையை உண்மையில் அடக்குவது என்பது ஒரு மிக பெரிய கலை. இதை நம்மால் தனியே நின்று சாதிப்பது என்பது மிகவும் கடினம். “கடவுள் பக்தி” என்ற ஒரு நண்பனின் உதவி கொண்டே அதை சாதிக்க முடியும் என்று நினைக்கிறேன். நண்பர்களே, ஆசை என்பதே இல்லாத வாழ்க்கை வாழ முடியா விடினும், முடிந்த வரை தேவைகளுக்கு மட்டுமே ஆசை கொள்ள முயலுவோம்.

 

படிப்பதையும், நினைப்பதையும் செயல்முறை படுத்தும் சக்தியை, எல்லாம் வல்ல இறைவன் நமக்கு கொடுத்து துணை புரிவாராக (“தெய்வ பக்திஇல்லாத நண்பர்கள் எனின் மன உறுதியை, இறைவன் என பொருள் கொள்க).

“சர்வம் கிருஷ்ணார்ப்பணம்”

(கிருஷ்ணா – கிருஷ்+ந. “கிருஷ்”- சுழற்சியான பிறப்புகள். “ந” – நிறுத்துபவன்)

Leave a comment